அழுத்தத்தில் அநுர: இலங்கைக்கான அமெரிக்காவின் இரண்டு திட்டங்கள் இரத்து – எலோன் மஸ்க் அதிரடி

10 25

அழுத்தத்தில் அநுர: இலங்கைக்கான அமெரிக்காவின் இரண்டு திட்டங்கள் இரத்து – எலோன் மஸ்க் அதிரடி

காலநிலை மாற்ற சவால்களை சீராகக் கையாள்வது தொடர்பான ஆசிய பசுபிக் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்பாடலை ஊக்குவிக்கும் திட்டங்களை இரத்து செய்ய அமெரிக்கா (USA) தீர்மானித்துள்ளது.

SpaceX நிறுவனத்தின் உரிமையாளரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரியுமான எலோன் மஸ்க் (Elon Musk) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயத்தை எலோன் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அரசாங்க செயற்திறன் திணைக்களத்தின் ஆணையாளராக செயல்படும் எலொன் மஸ்க் இந்த திட்டங்கள் உட்பட உலகளாவிய ரீதியில் 199 திட்டங்களை பயனற்ற திட்டங்களாக கருதி நிறுத்தும் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் திட்டமிடப்பட்ட 1 பில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி (Adani Green Energy) விலக முடிவு செய்துள்ளதாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தற்போது இலங்கை முதலீட்டு சபைக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பாலான அனுமதிகளைப் பெற்ற போதிலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு தாமதங்களைக் காரணம் காட்டி, இன்றுவரை இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இது ஒரு “மரியாதைக்குரிய விலகல்” என்றும், இலங்கையில் எதிர்கால திட்டங்களுக்கு தங்கள் நிறுவனம் திறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version