பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யுங்கள்!! ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

19 1

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நியமங்களுக்கு அமைவானதொரு சட்டத்தின் ஊடாக அச்சட்டம் பதிலீடு செய்யப்படவேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற 4 ஆவது அமர்வில் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க்கினால் சர்வதேச நாடுகளின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான வருடாந்த அறிக்கை வெளியிடப்பட்டது. உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சர்வதேச நியமங்களுக்கு அமைவான புதியதொரு சட்டத்தின் மூலம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைப்பது இன்றியமையாததாகும்.

இதுகுறித்து சட்டத்துறை நிபுணர்களாலும், சிவில் சமூகப்பிரதிநிதிகளாலும் முன்வைக்கப்படும் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் கவனத்திற்கொள்ளப்படுவதை நாம் பெரிதும் ஊக்குவிக்கின்றோம். அதனூடாக நாட்டுமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், அவற்றுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்தக்கூடியவாறான சட்டத்தின் மூலம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யமுடியும்.

அதேவேளை பயங்கரவாத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version