சுமார் 20 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருளைக் கடத்தி வந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு இலங்கை பயணிகளைக் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இன்று (29) காலை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இந்தப் போதைப்பொருள் தொகையைத் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து, இந்தியாவின் மும்பை நகருக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து இண்டிகோ (IndiGo) விமான சேவைக்குச் சொந்தமான 6E-1185 என்ற விமானம் மூலம் இன்று காலை 07.50 மணிக்கு இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட அளவு: இவர்களது பயணப் பொதிகளில் 20 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ 684 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
குறித்த பெண்கள் பொரளை மற்றும் ஒருகொடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். ஆண்கள் தெமட்டகொட மற்றும் ஒருகொடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவின் ஆலோசனையின் பேரில் இந்த வெற்றிகரமான சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

