கடந்த 30 வருடங்களாகத் தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பிரதிநிதித்துவமின்மை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று தசாப்தங்களாகத் தமிழ் மக்களின் தேவைகளுக்காகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து ஆற்றிய பணிகளை அவர் நினைவு கூர்ந்தார்.
மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி வாக்களித்திருந்தாலும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு (EPDP) குறைந்தபட்சம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியாவது நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே அந்த மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் தமது கட்சியின் குரல் ஒலிக்காத காரணத்தால், தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளை முன்வைப்பதில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளதை மக்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் தேர்தல் பின்னடைவு தற்காலிகமானது என்றும், மக்களின் தேவைகளை உணர்ந்து கட்சித் தொடர்ந்தும் மக்கள் பணியாற்றும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டார்.

