பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ், தனது சகோதரரான இளவரசர் ஆண்ட்ரூவிடமிருந்து அனைத்துப் பட்டங்களையும் நீக்கி, விண்ட்சரில் உள்ள அவரது இல்லத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மறைந்த ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனான 65 வயதான இளவரசர் ஆண்ட்ரூ, குற்றம் சாட்டப்பட்ட பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் கொண்டிருந்த தொடர்புகள் காரணமாகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, இளவரசர் ஆண்ட்ரூ தான் வகித்து வந்த “யோர்க் கோமகன்” (Duke of York) உள்ளிட்ட தனது அனைத்துப் பட்டங்களையும் இந்த மாதமே துறப்பதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சையைத் தொடர்ந்து பெற்று வரும் மன்னர் சார்ல்ஸ், தனது நடவடிக்கையைக் கடுமையாக்கி, ஆண்ட்ரூவின் அனைத்துப் பட்டங்களையும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
சமகால பிரித்தானிய அரச குடும்ப வரலாற்றில் இது மிகக் கடுமையான நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

