ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஜூலி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் குறித்து வெளியிட்ட விமர்சனத்தைத் தொடர்ந்து, தமக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சமீபத்தில் வேலூர் மாவட்ட தவெக கூட்டத்தில் விஜய் கூறிய ‘குட்டிக்கதை’ மற்றும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த விமர்சனம் விஜய் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்களில் ஜூலிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், தன்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கும் விதமாகவும், நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாகவும் பொய்ப் பிரசாரங்கள் செய்யப்படுவதாக ஜூலி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜூலி அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது “கிட்னி விற்பனை மோசடியில் என்னைத் தொடர்புபடுத்தி, ஆதாரமற்ற பொய்யான வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு எனக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். இதற்குப் பின்னால் இருக்கும் தவெக நிர்வாகி ஒருவர் உட்பட 8 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அரசியல் ரீதியான ஒரு விமர்சனத்திற்காக, ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கௌரவத்தைச் சிதைக்கும் வகையில் அவதூறு பரப்புவது சமூக வலைதளங்களில் தார்மீக ரீதியான விவாதங்களை உருவாக்கியுள்ளது. இப்புகார் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

