வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

image 1200x800 20 2

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் (All Island People’s Uprising Party) நிறுவனருக்கு எதிராக யாழ்ப்பாணக் காவல் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்திற்குள் விநியோகிக்கப்பட்ட தினசரி பத்திரிகைகளுடன் இணைத்து, குறித்த கட்சியின் துண்டுப்பிரசுரங்களும் சட்டவிரோதமான முறையில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்தத் துண்டுப்பிரசுரத்தில் வைத்தியர் சத்தியமூர்த்தியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான மற்றும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். நகரப் பகுதியிலும் பரவலாக விநியோகிக்கப்பட்டு வரும் இந்தத் துண்டுப்பிரசுரங்கள், திட்டமிட்ட வகையில் தனது கௌரவத்தைச் சிதைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

பணிப்பாளர் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து, யாழ்ப்பாணக் காவல்துறையினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வைத்தியசாலை போன்ற உயர் பாதுகாப்பு மற்றும் சேவை மையங்களுக்குள் அனுமதியின்றி அரசியல் பிரசாரங்களை முன்னெடுத்தமை மற்றும் அவதூறு பரப்பியமை தொடர்பாகக் குறித்த கட்சியின் நிறுவனரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்தச் சம்பவம் யாழ். மருத்துவ மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Exit mobile version