வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, யாழ்ப்பாண மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவிலான பாரிய இயற்கை இடரைச் சந்திக்கக்கூடும் என யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.
புதன்கிழமை (07) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர், யாழ். மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிக அதீத மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளது.
இது மணிக்கு 9 கிலோ மீற்றர் என்ற மிகக் குறைந்த வேகத்தில் நகர்வதால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் தங்கி மழையை அதிகளவில் பொழியும். அத்துடன் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இந்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கம், அண்மையில் ‘டிட்வா’ (Ditwah) புயலால் தென்பகுதி எதிர்கொண்ட அழிவுகளை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1970-ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21-ஆவது தாழ்வு மண்டலம் இதுவாகும். ஜனவரி 8, 9, 10 ஆகிய திகதிகளில் பாரிய மழைவீழ்ச்சியை எதிர்கொள்ளும்.
ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மிக உச்சகட்ட மழைப்பொழிவைச் சந்திக்கும். வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழையுடனான வானிலை ஜனவரி 8 முதல் அதிகரிக்கும்.
பாரிய பயிர் அழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மாவட்டச் செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் துரித முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையைத் தீவிரமாகக் கருதி, தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

