போன் பேசியபடியே சான்றிதழ் வழங்கும் மேயர் பிரியா! வறுத்தெடுக்கும் மக்கள்?

1 18

போன் பேசியபடியே சான்றிதழ் வழங்கும் மேயர் பிரியா! வறுத்தெடுக்கும் மக்கள்?

செல்போனில் பேசிக்கொண்டே அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் மேயர் பிரியாவின் செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
நேற்று குடியரசு தின விழா கொண்டாட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கொண்டாடப்பட்டது. அங்கு மேயர் பிரியா ராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த விழாவில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அப்போது, சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளை அலட்சியப்படுத்தும் விதமாக மேயர் பிரியாவின் செயல் இருந்தது. மேயர் பிரியா சான்றிதழ் வழங்கும் போது, தனக்கு அருகே நின்று கொண்டிருந்த மகேஷ் குமார் என்பவரிடம் பேசிக்கொண்டே வழங்கினார்.

அதுமட்டுமல்லாமல், அவருக்கு அந்த நேரத்தில் செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது. அப்போது அவர் போனை எடுத்து பேச ஆரம்பித்து விட்டார்.

பின்னர், அடுத்த சான்றிதழ் வழங்குவதற்காக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவருக்காக காத்திருந்தார். ஆனால் மேயர் பிரியா, கழுத்தை சாய்த்து வைத்து போனில் பேசியபடியே அதிகாரிக்கு சான்றிதழ் வழங்கினார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version