வரி செலுத்துவோருக்கு ‘கோல்ட், சில்வர்’ கார்டு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்திய புதிய அதிரடி சலுகைத் திட்டம்!

05 1

நாட்டின் வரி செலுத்தும் கலாசாரத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தமது வரிப் பொறுப்புக்களைத் துல்லியமாகவும், தொடர்ச்சியாகவும் நிறைவேற்றும் வரி செலுத்துவோரை கௌரவிப்பதற்காக “வரி செலுத்துவோர் வரப்பிரசாத அட்டைத் திட்டத்தை” (Taxpayer Privilege Card Scheme) உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. தனிநபர் வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து (Self-Assessed) வரி செலுத்துவதை ஊக்குவிப்பதையும், வரி ஏய்ப்பைக் குறைப்பதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டிற்கு அதிக பங்களிப்பு வழங்கும் குடிமக்களுக்கு உரிய அங்கீகாரமும், முன்னுரிமையும் வழங்கப்படவுள்ளது.

இந்தச் சலுகை அட்டையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் வரி செலுத்துவோர், வருமான வரி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வரிகளையும் உரிய திகதிக்கு முன்னரோ அல்லது அன்றைய தினமோ செலுத்தியிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். அத்துடன், விண்ணப்பதாரரின் கடந்த கால வரி இணக்கத்தன்மை வரலாறானது எவ்வித முறைகேடுகளும் இன்றி சீரானதாக அமைந்திருக்க வேண்டும். இந்தச் சலுகை அட்டைகள் இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன: கடந்த ஆண்டில் 5 மில்லியன் ரூபாய்க்கு மேல் வரி செலுத்தியவர்களுக்கு ‘தங்க அட்டை’ (Gold Card) மற்றும் 3 மில்லியன் முதல் 5 மில்லியன் ரூபாய் வரை வரி செலுத்தியவர்களுக்கு ‘வெள்ளி அட்டை’ (Silver Card) ஆகியன வழங்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தில் இணைய ஆர்வமுள்ள தகுதியான வரி செலுத்துவோர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.ird.gov.lk ஊடாக விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு எதிர்வரும் 2026 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தார்மீக ரீதியாக வலுசேர்க்கும் நேர்மையான வரி செலுத்துவோருக்குக் கிடைக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, உரிய கௌரவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Exit mobile version