முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிபுணர்கள் குழு, தனது இடைக்கால அறிக்கையை 03 முக்கிய பரிந்துரைகளுடன் சமர்ப்பித்துள்ளது.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன இந்த அறிக்கையின் விபரங்களை வெளியிட்டுள்ளார். மருத்துவமனை அறிக்கைகளில் குளறுபடிகள் அல்லது முரண்பாடுகள் இருப்பதாகக் கருதப்பட்டால், அது குறித்து உடனடியாகக் காவல்துறையில் முறைப்பாடு செய்ய வேண்டும்.
அவசர சிகிச்சைப் பிரிவில் (ETU) குறித்த நேரத்தில் கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை, உடனடியாகச் சாதாரண நோயாளர் விடுதிக்கு (Ward) மாற்ற வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மருத்துவரைத் தனித்துச் செயற்பட விடாமல், மற்றுமொரு சிரேஷ்ட அதிகாரியின் நேரடி கண்காணிப்பின் கீழ் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
இந்த பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21 ஆம் திகதி உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழந்தார். முறையான சிகிச்சை அளிக்கப்படாததே சிறுமியின் மரணத்திற்குப் பிரதான காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தவே மாகாண சுகாதார அமைச்சு இந்த நிபுணர் குழுவை நியமித்தது.
சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கை இன்னும் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான அறிக்கை கிடைத்த பின்னரே, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான முறைமைசார் ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.