இலங்கையின் பல்வேறு பகுதிகளில் முச்சக்கரவண்டிகளைத் திருடி, அவற்றின் இயந்திர (Engine) மற்றும் செஸி (Chassis) இலக்கங்களை மாற்றி விற்பனை செய்து வந்த மூன்று சந்தேகநபர்களை நுகேகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பலாங்கொடை, பதுளை, பத்தரமுல்ல மற்றும் மிரிஹானை ஆகிய பகுதிகளில் இருந்து இந்த முச்சக்கரவண்டிகள் திருடப்பட்டுள்ளன.
திருடப்பட்ட வாகனங்களின் இயந்திர மற்றும் செஸி இலக்கங்களை மாற்றியும், வர்ணங்களை மாற்றியும் புதிய வாகனங்கள் போல் தோற்றமளிக்கச் செய்துள்ளனர்.
இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளை தலா 12 முதல் 13 இலட்சம் ரூபாய் வரையான விலைக்குப் பொதுமக்களிடம் விற்பனை செய்து வந்துள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதியில் பதிவான ஒரு திருட்டு முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அங்குருவெல்ல மற்றும் குருவிட்ட பகுதிகளைச் சேர்ந்த 28 முதல் 43 வயதுக்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 11 திருடப்பட்ட முச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளை (12) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். பழைய முச்சக்கரவண்டிகளை வாங்கும் போது அவற்றின் ஆவணங்கள் மற்றும் இலக்கங்களை உரிய முறையில் சரிபார்க்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.