இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஏழு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில் இந்த உடன்படிக்கைகள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள உரிய அமைச்சுக்களுக்கு கடிதங்களை எழுதியதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எண்ணெய் தாங்கி அபிவிருத்தி, மின் கம்பிகள் மூலம் இந்தியாவுடன் இணைப்பை ஏற்படுத்தல் மற்றும் கிழக்கு அபிவிருத்தி திட்டம் போன்ற விடயங்கள் குறித்த அமைச்சுக்கள் உடன்படிக்கை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், டிஜிட்டல் விவகார அமைச்சு செய்து கொண்ட உடன்படிக்கை பற்றிய விபரங்களை வெளியிடுவதற்கு இந்தியாவின் இணக்கப்பாடு தேவை என பதிலளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி உடன்படிக்கை பற்றிய விபரங்களை வெளியிட முடியாது என டிஜிட்டல் விவகார அமைச்சு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் விவகார அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சு என்பன இந்தியா என்ற பெயரில் இருக்கும் இரண்டு நாடுகளுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளனவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏனெனில் கிழக்கு அபிவிருத்தி குறித்து இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை விபரங்களை எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.
எனினும் டிஜிட்டல் விவகார அமைச்சு இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கை பற்றிய விபரங்களை வெளியிட மறுத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவுடனான உடன்படிக்கையில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என கருதப்படக்கூடிய மின் கம்பி இணைப்பு மற்றும் எண்ணெய் குழாய் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
டிஜிட்டல் அமைச்சு மட்டுமே இவ்வாறான ஓர் பதிலை வழங்கியுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
டிஜிட்டல் அமைச்சு, இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை ஏன் மூடி மறைக்க முயற்சிக்கப்படுகின்றது என உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.