புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித் திட்டம் ஒன்றை இந்தியா அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நாளை (திங்கட்கிழமை) ஒருநாள் விஜயமாக கொழும்பு வரவுள்ளார்.
அனர்த்தத்திற்குப் பிந்தைய மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக இந்தியா சார்பில் வழங்கப்படவுள்ள பிரம்மாண்ட உதவித் திட்டத்தை அவர் கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது விஜயத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை, இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளை அவர் கூட்டாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிகிறது.
இலங்கை அனர்த்தத்தில் சிக்கிய உடனேயே இந்தியா தனது நிவாரண உதவிகளையும் மீட்புக் குழுக்களையும் அனுப்பி வைத்திருந்தது. தற்போது வரை இந்தியாவின் மீட்பு நடவடிக்கைகள் இலங்கையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய பேருதவித் திட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
அமைச்சர் ஜெய்சங்கர் வேறு எந்தெந்த எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பார் என்பது குறித்த விபரங்கள் இன்று மாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இந்தியத் தூதரகம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

