மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய அண்டை நாடுகள் தங்களுக்கான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த விடயம் குறித்து இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த நாடுகள் விடுத்துள்ள கோரிக்கைகளை இந்தியா பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்.
சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அண்டை நாடுகளுடனான உறவு மற்றும் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையின் அடிப்படையில் இந்த வேண்டுகோள்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று கூறினார். இருப்பினும், எரிபொருள் விநியோகம் தொடர்பாக முடிவெடுக்கும் போது, இந்தியாவின் உள்நாட்டு எரிபொருள் சுத்திகரிப்புத் திறன், தேவை மற்றும் இருப்பு ஆகிய காரணிகளைக் கருத்தில் கொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போது மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் ஹோர்முஸ் நீரிணைப் பாதையில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள், தெற்காசியப் பிராந்தியத்தின் எரிபொருள் விநியோகச் சங்கிலியில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. பங்களாதேஷின் டீசல் தேவைக்காக, இந்தியா ஏற்கனவே இந்தியா-பங்களாதேஷ் நட்புறவு குழாய்த்தொடர் (India-Bangladesh Friendship Pipeline) ஊடாகத் தடையற்ற விநியோகத்தை முன்னெடுத்து வருவதாகவும், தேவைக்கேற்ப அந்த விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிராந்தியத்தில் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இந்தியாவுக்கு முக்கிய முன்னுரிமையாக உள்ளது. அண்டை நாடுகளின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், இந்தியாவின் சொந்தத் தேவைகளும் பாதிக்கப்படாத வகையில் இராஜதந்திர ரீதியில் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி விநியோகத் தொடர்ச்சி குறித்து ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.