தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர் கே.டி. லால்காந்தவை கடுமையாக விமர்சித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, அவருக்கு எதிராக விளையாட்டுப் பாணியிலான எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
அமைச்சர் லால்காந்த தன்னை தற்காப்புக் கலை வீரர் ப்ரூஸ் லீயுடன் ஒப்பிட்டுப் பேசியதாகக் குறிப்பிட்ட சாமர சம்பத், “நீங்கள் ப்ரூஸ் லீ என்றால், நான் மைக் டைசன். இரண்டு குத்துகள் கொடுத்தால் நீங்கள் தரையில் விழுந்துவிடுவீர்கள்” எனப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உள்ள 159 தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் மக்கள் படும் பொருளாதாரத் துயரங்களைக் கண்டும் காணாமல் “கல் சிலைகள்” போல மௌனமாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து வெளிப்படையாகப் பேசிய சாமர சம்பத் தசநாயக்க தற்போது தனக்கு எதிராக 14 நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
அண்மையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தனக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும், உயர் நீதிமன்றம் மற்றும் பதுளை நீதிமன்றங்களில் விசாரணைகள் தொடர்வதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
இத்தனை சட்டச் சவால்கள் இருந்தாலும், மக்களுக்காகக் குரல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை என அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, இஸ்ரேல் தயாரிப்பு நவீன ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்தும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.