தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று (25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் இலக்கு குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
நான் யாருடைய அழுத்தத்திற்கும் அடங்குபவன் அல்ல. எனக்கு இருக்கும் ஒரே அழுத்தம் மக்கள் படும் துயரத்தைப் பற்றியதுதான். யாரிடமும் அண்டிப் பிழைப்பதற்காகவோ அல்லது அடிமையாக இருப்பதற்கோ நான் அரசியலுக்கு வரவில்லை என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
அரசியலில் ஒரு ரூபாய் கூட ஊழல் செய்ய மாட்டேன் என உறுதிபூண்ட அவர், எதற்கும் ஆசைப்படாத ஒருவனால் மட்டுமே தவறுகளைத் தைரியமாகத் தட்டிக் கேட்க முடியும் எனச் சுட்டிக்காட்டினார்.
தனது மண்ணுக்கும் மக்களுக்கும் ஒரு பிரச்சினை வரும்போது அதைத் தடுக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாகவும், அதற்காகவே அரசியலில் களமிறங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட ‘விசில்’ சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் தேர்தல் மட்டுமல்ல, அது ஒரு ‘ஜனநாயகப் போர்’ என்றும், இதில் வெற்றியைத் தீர்மானிக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், தமிழ்நாட்டை ஆள்பவர்கள் மற்றும் ஆள நினைப்பவர்கள் குறித்துத் தனது விமர்சனங்களை முன்வைத்ததுடன், மாற்றத்திற்கான சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகம் திகழும் எனத் தெரிவித்தார்.