இலங்கையில் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற சர்வதேசக் குற்றங்களை விசாரணை செய்து, நீதி வழங்க அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் தவறிவிட்டதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) தனது அண்மைக்கால அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2024 இல் பதவியேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்தது. இருப்பினும், நடைமுறையில் இதுவரை எவ்வித வெளிப்படையான முன்னேற்றமும் ஏற்படவில்லை என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
2009-இல் போர் நிறைவடைந்த போது, அரச படைகள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆகிய இரு தரப்பினருமே ஏராளமான போர்க்குற்றங்களைச் செய்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் பதவியில் இருந்த பல்வேறு அரசாங்கங்கள், போர்க்குற்ற விசாரணைகளைத் திட்டமிட்டு முடக்கியதுடன், நீதியை மறுப்பதிலேயே குறியாக இருந்தன என HRW கண்டறிந்துள்ளது.
மோதல் காலப்பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்முறைகளை நிவர்த்தி செய்யத் தவறியது, உயிர் பிழைத்தவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த பாரிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களும், உயிர் பிழைத்தவர்களும் பல தசாப்தங்களாகத் தமக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்து, மிகுந்த பாதிப்புகளுக்கு மத்தியிலேயே இன்றும் வாழ்ந்து வருவதாக அறிக்கையில் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பொறுப்புக்கூறல் பொறிமுறையைச் சர்வதேசத் தரத்துடன் முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

