சீகிரியா, கலகொடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் (06) இரவு ஏற்பட்ட தீ விபத்தில், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவியின் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன.
மாணவி கல்வி கற்கும் அறையில் கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணினி (Laptop) ஆகியவை மின்னேற்றத்திற்காக (Charging) வைக்கப்பட்டிருந்தபோது ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்திற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அன்றைய தினம் மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 10 மணியளவில் மின்சாரம் வந்த பின்னரே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
தீ விபத்தின் போது எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. இருப்பினும், குறித்த மாணவியின் அறை, அவரது பெறுமதிமிக்க புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் அனைத்தும் சில நிமிடங்களிலேயே எரிந்து சாம்பலாகியுள்ளன.
தீ பரவியதைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் உடனடியாகச் செயற்பட்டனர். தம்புள்ளை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் வரவழைக்கப்பட்டுத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், வீட்டின் ஒரு பகுதி மற்றும் மாணவியின் உடைமைகளுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தங்குமிடம் வழங்குவதற்காக நான் பக்கத்து வீட்டிற்குச் சென்றிருந்தேன். மின்சாரம் வந்ததும் லேப்டொப் மற்றும் போனை சார்ஜ் செய்யப் போட்டிருந்தோம். ஆனால் சில நிமிடங்களில் மகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் வகையில் எல்லாம் எரிந்துவிட்டது என மாணவியின் தாய் கவலையுடன் தெரிவித்தார்.
சீகிரியா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.