உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைக்கும் விவகாரம் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க கிரீன்லாந்து இணக்கம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் அமெரிக்கா மற்றும் டென்மார்க் அதிகாரிகளுக்கு இடையே நடைபெறவுள்ள உயர்மட்ட இராஜதந்திரச் சந்திப்பில் கிரீன்லாந்தும் ஒரு தரப்பாகப் பங்கேற்கும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் விவியன் மோட்ஸ்ஃபெல்ட் (Vivian Motzfeldt) உறுதிப்படுத்தியுள்ளார்.
“இந்தச் சந்திப்பைக் கோரியதே நாங்கள்தான். எனவே, ‘கிரீன்லாந்து இன்றி கிரீன்லாந்து பற்றி எதுவும் இல்லை’ (Nothing about Greenland without Greenland) என்ற எமது கொள்கையின் அடிப்படையில் நிச்சயம் இதில் பங்கேற்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதை அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு முன்னுரிமையாகக் கருதுகிறார்.
இந்தப் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காணவே வெள்ளை மாளிகை முன்னுரிமை அளிக்கிறது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை வழிநடத்துவார்.
எனினும், தேவையேற்படின் இராணுவ நடவடிக்கை (Military Option) உட்பட அனைத்து வழிமுறைகளும் பரிசீலனையில் இருப்பதாக வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்து டென்மார்க்கிற்குச் சொந்தமான தீவாக இருந்தாலும், அது ஒரு தன்னாட்சிப் பிரதேசமாகச் (Self-governing territory) செயல்பட்டு வருகிறது.
கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்று டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துத் தலைவர்கள் ஏற்கனவே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். வலுக்கட்டாயமாக இணைக்க முயன்றால் அது நேட்டோ (NATO) இராணுவக் கூட்டணியின் முடிவுக்கு வழிவகுக்கும் என ஐரோப்பியத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆர்க்டிக் பிராந்தியத்தில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த கிரீன்லாந்து தமக்கு மிகவும் அவசியம் என்பது அமெரிக்காவின் வாதமாகும்.