தேசிய எரிபொருள் QR முறை: தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை

14 14

இலங்கையில் இன்று (மார்ச் 15) காலை 6:00 மணி முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR) முறை மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களுக்கு விரைந்து தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே பதிவு செய்து, அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும் உரிமையாளர்கள் எவ்விதத் தடைகளும் இன்றி இணையதளத்தின் ஊடாகத் தமது QR குறியீட்டைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், வாகன உரிமை மாற்றம் செய்தவர்கள், தொலைபேசி இலக்கங்களை மாற்றியவர்கள் மற்றும் புதிய வாகனங்களை வாங்கியவர்கள் பதிவுகளை மேற்கொள்வதில் சில தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்தச் சிக்கல்களை அடையாளம் கண்டுள்ள அதிகாரிகள், அவற்றை மிக விரைவாகத் தீர்ப்பதற்கான விசேட நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். பொதுமக்கள் இது குறித்துத் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், முறையான பதிவுகளை மேற்கொள்வதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாயத் துறை சார்ந்த வாகனங்களுக்குத் தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும், விநியோகத்தில் காணப்படும் சிறப்புத் தேவைகளைக் கையாளவும் இன்று (15) பிற்பகல் முக்கிய உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் எடுக்கப்படும் இறுதித் தீர்மானங்கள் மற்றும் விசேட நடைமுறைகள் குறித்த விபரங்கள் இன்றைய தினத்திற்குள்ளேயே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகம் இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதுடன், மற்ற அத்தியாவசியத் துறைகளுக்கான விநியோக ஏற்பாடுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் உத்தியோகபூர்வ தகவல்களுக்காக fuelpass.gov.lk என்ற இணையதளத்தை மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிக்காமல் தடையின்றித் தொடரச் செய்வதே இந்த QR முறைமையின் பிரதான நோக்கமாகும்.

Exit mobile version