அமெரிக்க விசா வைத்திருக்கும் தனது ஊழியர்கள் சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கத் தூதரகங்களில் விசா நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள பாரிய தாமதங்களே இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அமெரிக்காவிற்குள் மீண்டும் நுழைவதற்குப் புதிய விசா முத்திரை தேவைப்படும் ஊழியர்கள், தற்போது நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சில அமெரிக்கத் தூதரகங்களில் விசா நேர்காணல் சந்திப்புகளுக்கு (Appointments) 12 மாதங்கள் வரை காலதாமதம் ஏற்படுகின்றது. இதனால் ஊழியர்கள் அமெரிக்காவிற்கு வெளியே நீண்ட காலம் தங்கியிருக்க நேரிடும் அபாயம் உள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் எச்-1பி (H-1B) விசா விண்ணப்பதாரர்களைக் கடுமையாகச் சரிபார்க்கும் புதிய நடைமுறைகளை அமுல்படுத்தியுள்ளது. இதில் விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகக் கணக்குகளைச் சரிபார்ப்பதும் அடங்கும்.
இந்த ஆண்டு புதிய H-1B விண்ணப்பங்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் 100,000 டொலர் கட்டணத்தை விதித்துள்ளது, இது தொழில்நுட்பத் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவிலிருந்து வரும் திறமையான தொழிலாளர்களை இது அதிகம் பாதித்துள்ளது.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (Alphabet), விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவிலேயே தங்கியிருக்குமாறு வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.