ஸ்மெத்விக் கத்திக்குத்து: உயிரிழந்த இளைஞன் ஜீஷான் நினைவாக 9,000 பவுண்டுகள் நிதி சேகரிப்பு!

londan

ஐக்கிய இராச்சியத்தின் ஸ்மெத்விக் (Smethwick) பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியே இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் அகால மரணமடைந்த 18 வயது இளைஞன் ஜீஷான் அப்சலின் (Zeeshan Afzal) நினைவாக ஆரம்பிக்கப்பட்ட நிதி சேகரிப்பு, குறுகிய காலத்தில் 9,000 பவுண்டுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெஸ்ட் மிட்லாண்ட்ஸின் ஓல்ட்பரி வீதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஜீஷான் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்தச் சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, இது ஒரு இன ரீதியான அல்லது மத ரீதியான வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட தாக்குதலா என்ற அச்சம் நிலவியது. இருப்பினும், ஆரம்பகட்ட விசாரணைகளின்படி இந்தத் தாக்குதலானது இன அல்லது மத வன்மம் காரணமாக நடந்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று காவல்துறை திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், ஜீஷானின் குடும்பத்தினர் இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் ‘சதகா ஜாரியா’ (நன்மைகள் தரும் தர்மம்) எனும் நோக்கில் இணையம் வாயிலாக நிதி சேகரிப்பை ஆரம்பித்தனர். இந்த நிதியைக் கொண்டு ஏழைகளுக்கு நீர் கிணறுகள் அமைத்தல் போன்ற அறப்பணிகளைச் செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். “எங்கள் மகன் ஒரு அன்பான இளைஞன், அவனது நினைவாகச் செய்யப்படும் இந்தத் தர்மம் அவனது ஆத்மாவுக்கு நன்மையளிக்கும்” என அவது குடும்பத்தினர் உருக்கமாகத் தெரிவித்துள்ளனர். இந்த நிதி சேகரிப்பிற்கு உள்ளூர் மக்கள் மட்டுமன்றிப் பல தரப்பினரும் தமது பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர்.

 

Exit mobile version