டித்வா புயல்: ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்!

25 6949732ef2e8e

‘டித்வா’ (Titli) புயல் அனர்த்தத்தின் போது முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை (FR) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கண்டியைச் சேர்ந்த சட்டத்தரணி கீர்த்தி பண்டார கிரிதேன என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் பேரழிவு குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தும், ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைப் பேரவை ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளன.

கொத்மலை போன்ற முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து முன்கூட்டியே நீரை வெளியேற்றாதது மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் சரியான நேரத்தில் திறக்கப்படாததே மகாவலி நதி பெருக்கெடுத்துக் கண்டி, கம்பளை, பேராதனை பகுதிகளில் பாரிய சேதத்தை ஏற்படுத்தக் காரணம் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள தனது அலுவலகம் வெள்ளத்தினால் முழுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், தனது வாழ்நாள் சேமிப்பான கணினி தரவுத்தளங்களை இழந்துள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 35 வது பிரிவின்படி சட்டமா அதிபர் முதலாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார். அத்துடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க (தேசிய பேரிடர் மேலாண்மைப் பேரவையின் தலைவர் என்ற ரீதியில்) பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள்.

அரசாங்கத்தின் செயலற்ற தன்மை மற்றும் அலட்சியப் போக்கு காரணமாக அரசியலமைப்பினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துமாறும், உரிய இழப்பீடுகளை வழங்குமாறும் மனுதாரர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

கண்டி நீதிமன்ற வளாகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் போன்ற முக்கிய இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமை முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலைமை என்றும் அவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

 

 

Exit mobile version