தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

Untitled 52

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நான்கு பேரையும் பாலப்பிட்டிய உயர் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. அரசுத் தரப்பு சாட்சியங்களில் காணப்பட்ட கடுமையான முரண்பாடுகள் மற்றும் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதில் இருந்த குளறுபடிகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

2006 செப்டம்பர் 11-ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில், நிதி மோசடிச் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்காக அம்பலங்கொட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சார்ஜென்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் சிவில் வாகனத்தில் தொட்டகமுவ பகுதிக்குச் சென்றிருந்தனர். இதன்போது அங்கு வந்த ஒரு கும்பல், பொலிஸாரிடம் இருந்த டி-56 ரக துப்பாக்கிகளைப் பறித்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் வாகன ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் ஐந்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின் போது, பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ஜெயபா கலுபஹானா, அரசுத் தரப்பு முன்வைத்த சாட்சியங்களில் உள்ள பாரிய முரண்பாடுகளை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். குறிப்பாக, சம்பவத்தை நேரில் கண்டதாகக் கூறப்படும் சாட்சிகள், குற்றவாளிகளை அடையாளம் காண்பதிலும், துப்பாக்கி பறிக்கப்பட்ட விதம் குறித்தும் வெவ்வேறு நேரங்களில் முரண்பட்ட தகவல்களை வழங்கியிருந்ததை அவர் ஆதாரங்களுடன் நிரூபித்தார். ஒரே ஒளி அமைப்பு மற்றும் ஒரே கோணத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை விவரிப்பதில் சாட்சிகளிடையே நிலவிய இத்தகைய முரண்பாடுகள் வழக்கின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கின.

அரசுத் தரப்பானது இந்த வழக்கைக் கடந்து 18 ஆண்டுகளாகத் தகுந்த ஆதாரங்களுடன், நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறிவிட்டது எனப் பாதுகாப்புத் தரப்பு வாதிட்டது. அனைத்துச் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த நீதிபதி, சாட்சியங்களின் முரண்பாடுகள் வழக்கை முற்றிலுமாகப் பலவீனப்படுத்திவிட்டதாகக் கருதி, நான்கு குற்றவாளிகளையும் விடுவிக்க உத்தரவிட்டார். விசாரணையின் போது முதல் குற்றவாளி உயிரிழந்ததால் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version