கொரியர் சேவை ஊடாக கரடி பொம்மைக்குள் மறைத்து ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரை, எதிர்வரும் ஏப்ரல் 20-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 43 வயதுடைய குறித்த சந்தேக நபர், காரைதீவு பிரதேச சபையில் ‘தோடம்பழம்’ சுயேட்சைக் குழுவின் முன்னாள் உறுப்பினராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் 8-ஆம் திகதி மாலை, அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த விசேட சோதனையின் போது இவர் சிக்கினார். மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (D.C.D.B) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கொரியர் மூலம் வந்த விளையாட்டுப் பொதியினை ஆய்வு செய்த போது, அதில் இருந்த கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் சூட்சுமமாக மறைக்கப்பட்டிருந்த 107 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட போது 120 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அந்த விசாரணை காலம் நிறைவடைந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 13) மீண்டும் சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவரை மேலும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டதுடன், வழக்கினை ஏப்ரல் 20-ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். இவரிடமிருந்து போதைப்பொருள் அளக்கப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் தராசு, 2 கைத்தொலைபேசிகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பனவும் சான்றுப் பொருட்களாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்புரையின் கீழ், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி ஆகியோரின் வழிகாட்டலில் இந்தச் சோதனை நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. அரசியல் பின்னணி கொண்ட ஒருவரே இத்தகைய கடத்தலில் ஈடுபட்டிருப்பது பிரதேச மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

