இலங்கை முழுவதும் மின்சார வாகனங்களுக்கான (EV) சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கு உதவுமாறு சீன அரசாங்கத்திடம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (29) முற்பகல் வெளிவிவகார அமைச்சில் சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது நாட்டின் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்துப் பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
சீனா உள்ளிட்ட உலகச் சந்தையிலிருந்து இலங்கை அதிகளவில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. இதற்காக நாடு முழுவதும் சார்ஜிங் நிலையங்களைச் சீன அரசாங்கத்தின் நன்கொடையாக நிறுவுவதற்கு அமைச்சர் முன்மொழிந்தார்.
எதிர்காலத்தில் அதிகளவிலான மின்சாரப் பேருந்துகளை (Electric Buses) இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மைய வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த தொடருந்து பாதைகள் மற்றும் பாலங்களை விரைவாகப் புனரமைக்கச் சீனாவின் ஆதரவு கோரப்பட்டது.
அமைச்சரின் முன்மொழிவுகளை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட சீனத் தூதுவர், இது குறித்துத் தனது அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவதாக உறுதியளித்தார். மேலும், ‘டிட்வா’ (Titli) சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு, அனைத்துத் துறைகளிலும் சீனா வழங்கக்கூடிய உதவிகள் குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

