சுமார் 4 கோடி 59 இலட்சத்து 26 ஆயிரத்து 957 ரூபாய் பெறுமதியுடைய தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற தனியார் விமான நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் இன்று (04) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஆவார். இவர் ஃபிட்ஸ் ஏர் (FitsAir) விமான நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
குறித்த பெண் தான் பணியாற்றிய விமானத்தின் மூலமாகவே கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். தனது பயணப் பைக்குள் (Luggage) மிகவும் சூட்சுமமான முறையில் தங்கத்தை மறைத்து வைத்திருந்துள்ளார்.
விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள விமான ஊழியர்களுக்கான விசேட வெளியேறும் வாயில் வழியாக வெளியேற முயன்றபோது, சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டதில் தங்கம் சிக்கியுள்ளது.
அவரிடமிருந்து மொத்தம் 1 கிலோ கிராம் மற்றும் 163 கிராம் எடையுடைய தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பெண் ஊழியரிடம் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இதன் பின்னணியில் ஏதேனும் கடத்தல் கும்பல் உள்ளதா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.

