டில்லியின் பிஷாம்பர் தாஸ் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரம்மபுத்ரா அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் நேற்று (அக்டோபர் 18) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெறும் 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இந்தக் குடியிருப்பை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 ஆம் ஆண்டு திறந்து வைத்தார். இங்கு பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் (எம்.பி.) தங்கி உள்ளனர்.
இந்த விபத்தின் காரணமாக அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவல் அறிந்ததும், உடனடியாக 10 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் நிலையில், அந்தக் குடியிருப்பு வளாகத்தில் இருந்த தீயணைப்புச் சாதனங்கள் (Fire Safety Equipment) வேலை செய்யவில்லை என குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.