அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயதுடைய மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தை ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரினால் சனிக்கிழமை (நவம்பர் 15) மாலை பெரிய நீலாவணைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமையப் பொலிஸார் சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
குடும்பத்தில் 3ஆவது பிள்ளையாக இருக்கும் இம்மாணவியை அவரது தந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட தந்தை கடல்தொழில் மேற்கொண்டு வருபவர் என்றும், மாணவியின் தாயார் நெசவுத் தொழிலை மேற்கொண்டு வருபவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சைகளுக்காகக் கல்முனையில் உள்ள வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர் குறித்து மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை சிறுவர் பெண்கள் பிரிவுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அவர்களின் ஆலோசனைக்கு அமைய, பெரிய நீலாவணைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பி. கஜேந்திரன் வழிகாட்டுதலில் குறித்த மேலதிக விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.