இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தி எதிர்வரும் ஏப்ரல் 21 முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள “அமைதிக்கான நடைப் பயணத்தில்” (Walk for Peace), அமெரிக்காவிலிருந்து வருகை தரும் பௌத்த பிக்குமாருடன் ‘அலோகா’ (Aloka) என்ற உலகப் புகழ்பெற்ற நாயும் இணையவுள்ளது. அமெரிக்காவில் சுமார் 2,300 மைல்கள் தூரம் பௌத்த பிக்குகளுடன் நடைபயணம் மேற்கொண்டு சர்வதேச கவனத்தை ஈர்த்த இந்த நாய், தற்போது இலங்கை மக்களின் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.
அமெரிக்க அமைதி நடைபயணத்தின் நிறுவுனர் பன்னாகர தேரர் தலைமையில் 12 பிக்குகள் பங்கேற்கும் இந்தப் பேரணி, ஏப்ரல் 21ஆம் திகதி அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியில் விசேட ஆசீர்வாதங்களுடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த நடைபயணத்தின் ஒரு பகுதியாக, புனித வெள்ளரச மரத்தின் கன்று ஒன்றும் எடுத்துச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 22 ஆம் திகதி தம்புள்ளையில் இருந்து தொடங்கும் இந்தப் பேரணி நாவுல, மாத்தளை, கண்டி, கடுகண்ணாவை மற்றும் கேகாலை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் ஊடாகப் பயணிக்கவுள்ளது.
இந்தப் பேரணி எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தைச் சென்றடையவுள்ளது. அங்கு நடைபெறும் நிறைவு விழாவில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்துகொண்டு புனித மரக்கன்றை அமெரிக்க பிக்குமாரிடம் கையளிக்கவுள்ளார். ‘அலோகா’ நாயை வானூர்தி மூலம் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரும் முயற்சிகள் தற்போது 50-50 சதவீத நிலையில் உள்ளதாகவும், அதனை உறுதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடைபயணம் கடந்து செல்லும் பாதைகளில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகளை அந்தந்தப் பகுதி காவல்துறையினர் மேற்கொள்ளவுள்ளனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வு, இலங்கையின் அமைதி மற்றும் கலாச்சார விழுமியங்களை உலகிற்கு எடுத்துச் சொல்லும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.