கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் பெண் பொலிஸ் பரிசோதகர் என ஆள்மாறாட்டம் செய்து உலாவந்த பெண் ஒருவர், கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
புறக்கோட்டையிலுள்ள விடுதி (Hotel) ஒன்றிற்கு அருகில் வைத்து சந்தேகநபர் அடையாளங் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.
குறித்த பெண் பொலிஸ் விளையாட்டுச் சீருடையை (Police Sports Uniform) அணிந்திருந்ததுடன், தன்னை ஒரு பெண் பொலிஸ் பரிசோதகர் (WIP) என அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
சந்தேகநபரைச் சோதனையிட்ட போது அவரிடமிருந்து அதிர்ச்சியூட்டும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பார்ப்பதற்குக் கைத்துப்பாக்கியைப் போன்றே தோற்றமளிக்கக் கூடிய, மரத்தினால் செய்யப்பட்ட போலி ஆயுதம் ஒன்றினை அவர் தன்வசம் வைத்திருந்துள்ளார்.
குறித்த பெண் எதற்காக இந்த ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டார்? இதன் மூலம் யாரையாவது அச்சுறுத்தி நிதி மோசடிகளில் ஈடுபட்டாரா? என்பது குறித்துக் கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

