பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கமென்று ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கமென்று இடம்பெற்றுள்ளதாகவும், அதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.இந் நிலநடுக்கமானது 5.8 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் பல நகரங்களில் இந்த அதிர்வை உணர முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பகுதிகளிளும் இவ்வதிர்வு உணரப்பட்டதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் ஏற்பட்ட பின் மிர்பூரில் உள்ள வீடுகள், கடைகள்,வர்த்தக கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின . இவ் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மிர்பூர் செல்லும் வீதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன, நிலநடுக்கம் ஏற்பட்ட போது வீதியில் சென்ற வாகனங்கள் பல கவிழ்ந்தன, சில கார்கள் வீதி இரண்டாகப் பிளந்தபோது அதற்குள் சிக்கிக்கொண்டன.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வீடுகளிலும், கடைகளிலும் நின்ற மக்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீதிக்கு ஓடி வந்தனர்.
பாகிஸ்தான் இராணுவ ஜெனரல் குவாமர் ஜாவித் பஜ்வா இச் சம்பவம் பற்றி கூறுகையில், “இடிபாடுகளில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க இராணுவப்படைகள் மற்றும் மருத்துவக்குழுக்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன எனக்கூறினார்.
இந் நிலநடுக்கத்தால் பெரும்பாலும் மிர்பூர், ஜீலம் நகரமே அதிகமான சேதம் அடைந்துள்ளன, பெரும்பாலான மக்கள் உறவுகளையும்,வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளார்கள் .
நிலநடுக்கத்தின் தாக்கம் பெஷாவர், ராவல்பிண்டி, லாகூர், கார்டு, கோஹத், சராசடா, கசூர், பைசலாபாத், குஜ்ராத், சாய்லகோட், அபோட்டாபாத், மான்செரா, சித்ரல், மாலாகன்ட், முல்தான், சாங்லா, ஓகரா, நவ்சேரா, அடாக்,ஜாங் ஆகிய நகரங்களில் உணரப்பட்டது.
இதை அமெரிக்க புவியியல் மையமும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.