ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) தொடர்பாகத் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கள் சில ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகத் தொழில் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (06) நாடாளுமன்ற உறுப்பினர் ஓஷானி உமங்கா ஹப்புஆரச்சி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இது குறித்துப் பேசினார்.
EPF என்பது ஒரு தனித்துவமான சமூகப் பாதுகாப்பு பொறிமுறையாகும். உறுப்பினர்கள் பல்வேறு கட்டங்களில் பணத்தைத் திரும்பப் பெறுவதால், முழுமையான சமூகப் பாதுகாப்பு நோக்கம் எட்டப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்களுக்கு அரசாங்க ஓய்வூதியத் திட்டத்தைப் போன்ற (Pension-like model) ஒரு பொறிமுறையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மட்டுமே ஆராயப்படுகின்றன.
இத்தகைய திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவோ அல்லது அங்கீகரிக்கப்படவோ இல்லை. இது தொடர்பான எந்தவொரு முடிவும் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் ஆலோசனையின் பின்னரே எடுக்கப்படும்.
தற்போதுள்ள EPF நடைமுறைகளில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தொழில் அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற பிறகு வழக்கம் போலவே தங்களது நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
வருங்காலத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலும், அவை தொழிற்சங்கங்கள் மற்றும் இலங்கை முதலாளிமார் கூட்டமைப்பு ஆகியவற்றின் இணக்கப்பாட்டுடனேயே நிகழும்.
பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அரைகுறையான தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனவும், அமைச்சின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மட்டும் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
No Changes to Current EPF System: Ministry of Labour Clarifies Deputy Minister Mahinda Jayasinghe’s Parliament Comments.