மன்னார் நகர மண்டபத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது!

25 691f13e047667

மாவீரர் வாரத்தையொட்டி, மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் உறவினர்களை ஒன்றிணைத்து, அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (நவம்பர் 20, 2025) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

அதன்படி, குறித்த நிகழ்வு இன்று (20.11.2025) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் உறவுகளுடன் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.

இதன்போது, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவீரர்களை நினைவுகூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு,மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்ட மாவீரர்களின் உறவுகள் தமது அஞ்சலியை செலுத்தினர்.

இம்மதிப்பளிப்பில் அருட்தந்தையர்கள்,முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் பங்குபற்றியிருந்தனர்.

குறித்த நிகழ்வில் மாவீரர் தியாகங்கள் பற்றிய பேச்சுக்கள் நடைபெற்றதுடன் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டதுடன் நினைவாக மரக்கன்றுகள் மாவீரர் பெற்றோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version