மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களைத் தணித்து, அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனடியாகத் தலையிட வேண்டும் என எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி திங்களன்று (மார்ச் 30, 2026) பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். கெய்ரோவில் நடைபெற்ற ‘எகிப்து எரிசக்தி கண்காட்சி 2026’ மாநாட்டில் உரையாற்றிய அவர், “அதிபர் டிரம்ப் அவர்களே, வளைகுடாப் பகுதியில் நடக்கும் இந்தப் போரை உங்களைத் தவிர வேறு யாராலும் நிறுத்த முடியாது; தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்” என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
இந்தப் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தை சந்திக்கவுள்ள பேராபத்து குறித்தும் அதிபர் சிசி இதன்போது எச்சரிக்கை விடுத்தார். எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் மீதான தாக்குதல்கள் தொடருமானால், ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 200 டாலரைத் தாண்டும் என்ற சந்தை ஆய்வாளர்களின் கணிப்பு மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல என அவர் சுட்டிக்காட்டினார். இது நடுத்தர மற்றும் பலவீனமான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் நிலைத்தன்மையை முற்றாகச் சீர்குலைக்கும் எனவும் அவர் கவலை வெளியிட்டார்.
ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளமை மற்றும் பிராந்திய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் (GCC) பொதுச்செயலாளர் ஜாசெம் முகமது அல்பூதைவி இம்மாநாட்டில் கண்டனம் தெரிவித்தார். உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கையாளும் முக்கிய கடல்வழிப் பாதை தடைப்பட்டுள்ளதால், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே காசா போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் டிரம்ப்பின் பங்களிப்பைப் பாராட்டிய அதிபர் சிசி, அதே போன்றதொரு இராஜதந்திர நகர்வை இப்போதும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். எரிபொருள் விலை உயர்வு மட்டுமன்றி, உர ஏற்றுமதி பாதிக்கப்படுவதால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடியும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து முக்கிய கடல்வழிப் பாதைகளைப் பாதுகாக்கத் தவறினால், உலகப் பொருளாதாரம் மீள முடியாத சரிவைச் சந்திக்கும் என்பதே இந்த மாநாட்டின் முக்கிய செய்தியாக அமைந்தது.

