வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 10-ஆம் திகதி வரை கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இன்று (08) முதல் ஜனவரி 10-ஆம் திகதி வரை கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீரற்ற காலநிலை நிலவும் இக்காலப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மின் விநியோகக் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு, மின்தடை (Power Cuts) ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் அதற்குத் தேவையான மாற்று ஏற்பாடுகளுடன் (மின்விளக்குகள், பேட்டரிகள்) தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வானிலை அறிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும், மரம் வீழக்கூடிய இடங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகே செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், அவசர காலங்களில் பிரதேச செயலகங்கள் அல்லது அனர்த்த முகாமைத்துவப் பிரிவைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.