ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவற்றுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கொடிய வைரஸ் ஒன்று பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் நோர்வே நார்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்தத் நவீன ஆய்வை முன்னெடுத்தனர்.
திமிங்கிலங்கள் கடலின் மேற்பரப்பிற்கு வந்து சுவாசிக்கும்போது, அவற்றின் சுவாசத் துளைகள் (Blowholes) வழியாக வெளிவரும் நீர்த்துளிகளை (Snot) ஆளில்லா விமானங்கள் மூலம் விஞ்ஞானிகள் சேகரித்தனர். திமிங்கிலங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி அவற்றின் ஆரோக்கியத்தைத் தூரத்திலிருந்தே கண்காணிக்க இந்தத் தொழில்நுட்பம் உதவியுள்ளது.
இந்த ஆய்வின் மூலம், கடல்வாழ் பாலூட்டிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படும் ‘செட்டேசியன் மோர்பில்லிவைரஸ்’ (Cetacean Morbillivirus) ஆர்ட்டிக் வட்டாரப் பகுதியில் பரவி வருவது முதல்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவக்கூடியது. திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின்கள் பெருமளவில் கூட்டமாகக் கரை ஒதுங்குவதற்கு இந்த வைரஸ் பாதிப்பு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், கடலில் நோய்கள் பெரிய அளவில் பரவத் தொடங்கும் முன்பே அவற்றைக் கண்டறிய முடியும். இதன் மூலம் அழிந்து வரும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

