பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான 35 லட்சம் பக்கங்கள் கொண்ட இரகசியக் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்தக் கோப்புகளில் டொனால்ட் ட்ரம்ப் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளும், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களும் இடம்பெற்றிருந்தது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்துத் தனது மௌனத்தைக் கலைத்துள்ள ட்ரம்ப், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையற்றவை எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வமான ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “எப்ஸ்டீன் விவகாரத்தில் நான் மறைக்க எதுவுமே இல்லை. நான் ஏற்கனவே இந்த விவகாரங்களில் இருந்து விடுவிக்கப்பட்டவன். உண்மையில், நான் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்பதற்காகச் சிலருடன் சேர்ந்து ஜெஃப்ரி எப்ஸ்டீன் போராடினார்” எனப் பதிலளித்துள்ளார். இதன் மூலம் எப்ஸ்டீன் தனக்கு எதிரானவராகவே இருந்தார் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
2019-ல் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த எப்ஸ்டீன், தனது கூட்டாளிகளுடன் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல்கள் மற்றும் பொலிஸாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்கள் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ட்ரம்பின் பெயர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அவருக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, வரும் தேர்தல்களில் இந்த விவகாரம் ட்ரம்பிற்குப் பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அதனைத் தீவிரமாக மறுத்து வருகிறார்.
ஒருபுறம் எப்ஸ்டீன் விவகாரம் ட்ரம்பைச் சூழ்ந்துள்ள நிலையில், மறுபுறம் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது மற்றும் ஈரான் – இஸ்ரேல் மோதல் தொடர்பான விவகாரங்களில் ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. “அமெரிக்காவை மீண்டும் முதன்மை நாடாக்குவதைத் தடுக்கவே இத்தகைய பழைய புகார்கள் தற்போது கிளப்பப்படுகின்றன” என ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள மேலதிக தகவல்கள் வரும் நாட்களில் அமெரிக்க அரசியலில் இன்னும் பல திருப்பங்களை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

