அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று மாபெரும் போராட்டத்தை நடத்துகின்றது. கொழும்பை முற்றுகையிட்டு இந்தப் போராட்டம் பிற்பகல் 3 மணி முதல் முன்னெடுக்கப்படுகின்றது.
இதற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவான மக்கள் கொழும்பு நோக்கிப் படையெடுத்துள்ளனர்.
அதன்படி வடக்கு, கிழக்கு, மலையகம் என நாட்டின் நமக்கு திசைகளில் இருந்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மற்றும் பொதுமக்களும் கொழும்பில் களமிறங்கியுள்ளனர்.
கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு அருகிலிருந்தும், பி.டி.சிரிசேன மைதானத்துக்கு அருகிலிருந்தும் என இரு இடங்களில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணிகள் ஆரம்பமாகியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவும் மக்களுடன் ஆர்ப்பாட்டப் பேரணியில் இணைந்துள்ளார்.
பேரணியில் மக்கள் சவப்பெட்டியைச் சுமந்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச போன்று வேடமிட்டு இந்தப் பேரணியில் சிலர் கலந்துகொண்டுள்ளனர்.
பஸில் போன்று வேடமிட்டவர்கள், “என்னால் நாட்டைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது; மன்னித்து விடுங்கள்” என ஒப்பாரியுடன் கூறிக்கொண்டு பேரணியில் இணைந்துள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு ஹைலெவல் வீதி, மாளிகாவத்தை, மருதானை உள்ளிட்ட பல பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment