இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் குற்றச்செயல்கள்: ஒரு பார்வை!

world 139

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள், விபத்துக்கள் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்துரட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானகொல பகுதியில் நேற்று (12) இரவு மதுபானசாலை ஒன்றிற்கு அருகில் ஏற்பட்ட மோதலில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட பகையினால் ஏற்பட்ட இந்த மோதலில், சந்தேகநபர் மரப்பலகையினால் தாக்கியதில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 31 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதானை, பஞ்சிகாவத்தை பகுதியில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 750 கிராம் ‘ஐஸ்’ மற்றும் 150 கிராம் ஹெரோயினுடன் 36 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், நீர்கொழும்பில் 67.5 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 53 வயதுடைய பெண் ஒருவரும், பாதுக்கையில் 67.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 1080 லீற்றர் ‘கோடா’வுடன் 26 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுப்பொத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடஹப்பொல – ரம்பாவெவ வீதியில் நேற்று பகல் லொறி ஒன்று பாலத்தின் பாதுகாப்புச் சுவருடன் மோதி கொழுமுணு ஓயா ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் படுகாயமடைந்த சாரதி மற்றும் உதவியாளர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். பலியானவர்கள் மீரிகம மற்றும் கல்எலிய பகுதிகளைச் சேர்ந்த 38 மற்றும் 63 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

Exit mobile version