இம்ரான் கானைக் காப்பாற்ற ஒன்று திரண்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள்! – கவாஸ்கர், கபில் தேவ் உட்பட 14 ஜாம்பவான்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!

image 1200x800 36

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், 1992-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த கேப்டனுமான இம்ரான் கானின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது வலது கண்ணில் தற்போது 15 சதவீத பார்வை மட்டுமே எஞ்சியிருப்பதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படாததே இந்தப் பார்வை இழப்பிற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், இம்ரான் கானுக்கு முறையான மருத்துவ சிகிச்சையும் மனிதாபிமான அடிப்படையிலான பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு வலியுறுத்தி, உலகின் 14 முன்னணி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் கூட்டு மனு ஒன்றை அளித்துள்ளனர். ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிரெக் சேப்பல் தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த மனுவில், இந்திய நட்சத்திரங்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் ஸ்டீவ் வாக், கிளைவ் லாயிட், நாசர் ஹுசைன் உள்ளிட்ட புகழ்பெற்ற முன்னாள் கேப்டன்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

கிரிக்கெட் உலகில் ஒரு சகாப்தமாகவும், பாகிஸ்தானுக்குப் பெருமை தேடித்தந்த தலைவராகவும் விளங்கிய இம்ரான் கானுக்கு, சர்வதேச தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் மற்றும் சட்டப்பூர்வமான உரிமைகளை வழங்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானின் முன்னாள் வீரர் வசீம் அக்ரமும் இதே கோரிக்கையை முன்வைத்திருந்த நிலையில், தற்போது உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் ஒன்றிணைந்துள்ளமை பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச அளவில் இராஜதந்திர அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Exit mobile version