இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது நேற்று (மே 02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களுக்கு ஏற்ப இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிவிப்பின்படி, பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் புதிய விலைகள்.
ஒக்டேன் 92 பெட்ரோல்: ஒரு லீற்றர் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 410.00 ஆகும்.
ஒக்டேன் 95 பெட்ரோல்: ஒரு லீற்றர் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 470.00 ஆகும்.
ஒட்டோ டீசல்: ஒரு லீற்றர் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 392.00 ஆகும்.
சுப்பர் டீசல்: ஒரு லீற்றர் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 458.00 ஆகும்.
மண்ணெண்ணெய்: ஒரு லீற்றர் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 265.00 ஆகும்.
திடீரென அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலை அதிகரிப்பானது பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக, டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்வு காரணமாக மீன்பிடித் தொழில் மற்றும் விவசாயத் துறையினர் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, நேற்று மாலை முதல் நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளைக் காண முடிந்தது. நள்ளிரவுக்கு முன்னதாகப் பழைய விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வாகன சாரதிகள் முண்டியடித்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதேவேளை, லங்கா ஐஓசி (LIOC) மற்றும் சினோபெக் (Sinopec) நிறுவனங்களும் தமது விலைகளை இதற்கு இணையாக மாற்றியமைத்துள்ளன.

