ஏர்பஸ் ஊழல் வழக்கு: கபில சந்திரசேனவின் பிணை நிராகரிப்பு!

Untitled 30

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் (Airbus) வானூர்திகளைக் கொள்வனவு செய்தபோது சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், அதன் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 02, 2026) நிராகரித்துள்ளது. சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் 17-ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார். பிணை வழங்குவதற்குப் போதுமான ‘விசேட காரணங்கள்’ எவையும் முன்வைக்கப்படவில்லை என நீதவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வழக்குடன் தொடர்புடைய ஏனைய முக்கிய சந்தேகநபர்களான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபையினரும், முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் புதல்வருமான ஷமிந்திர ராஜபக்ஷ மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்ய நீதிமன்றம் இன்று பகிரங்க பிடிவாரண்ட் (Open Warrants) பிறப்பித்துள்ளது. அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அனைத்து விமான நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் விசாரணையின் போது, கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டது. ஏர்பஸ் ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட கையூட்டல் பணத்தில் சுமார் 60 மில்லியன் ரூபா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மூன்று தவணைகளாக நேரடியாக வழங்கப்பட்டதாகக் கபில சந்திரசேன வாக்குமூலம் அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த வாக்குமூலமானது அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் மூலம் பெறப்பட்டது எனத் தெரிவித்து கபில சந்திரசேன பின்னர் சத்தியக்கடதாசி (Affidavit) ஒன்றையும் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2013-ஆம் ஆண்டு சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான 10 ஏர்பஸ் வானூர்திகளை வாங்கும் ஒப்பந்தத்தின் போது, மொத்தம் 16 மில்லியன் டொலர் கையூட்டல் பெறச் சதி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புருணையில் ஒரு போலி நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் சிங்கப்பூர் வங்கிக் கணக்கிற்குப் பணம் மாற்றப்பட்டுள்ளதாகப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். சர்வதேச ரீதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஊழல் வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

Exit mobile version