முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகனான ஷமிந்திர ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (02) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக 14 ஏர்பஸ் (Airbus) விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல்களில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஷமிந்திர ராஜபக்ஷவை சந்தேக நபராகக் கருதி, அவரைக் கைது செய்து விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் சிஐடியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முந்தைய நிர்வாகக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த விமானக் கொள்வனவு ஒப்பந்தம், கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சட்ட நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.