கேதீஸ்வர வாயலில் கிறிஸ்தவ சொரூபம் – கொதித்தெழுந்த சைவமகா சபை!!

f8f1ff26 6621 4973 8f30 d80780729c1c

சைவத்தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலமான திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் மிகப்பெரும் கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டமைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவர்களின் குறித்த செயலை வன்மையாகக் கண்டித்துள்ள சைவ மகா சபை, மேற்படி சொரூபத்தை அந்த இடத்தில் இருந்து அகற்ற மன்னார் ஆயர் இல்லம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சைவ மகா சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வரலாற்று பெருமைமிகு பாடல் பெற்ற ஈச்சரமான திருக்கேதீச்சரத்தில் அதன் தனித்துவத்தை சிதைக்கும் வகையில் சைவர்களின் மனதை மீள மீள புண்படுத்தும் வகையில் திருக்கேதீச்சர வளைவு உடைக்கப்பட்ட வீதியின் முகப்பில் மிகப் பெரிய கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டு 12.02.2022 திறக்கப்பட்டுள்ளது.

வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ள சமயம் இதனை உயர் மத பீடங்களின் ஆளுகையின் கீழ் இயங்கும் அண்மைய ஆண்டுகளில் பெருமெடுப்பில் பண்டைய ஒப்பந்த நடைமுறைகளுக்கு மாறாக கட்டப்பட்ட தேவாலாய நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

மன்னார் உயர் அரச அதிகாரிகளுக்கு முன்கூட்டியே அறிவித்தும் சொரூபம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது மிகுந்த அவதானத்துக்குரிய விடயமாகும்.

இது தொடர்பாக திருக்கேதீச்சர ஆலய நிர்வாகம் பொலிஸ் முறைப்பாடு ஒன்றை செய்துள்ள நிலையில் வரலாற்று கால தமிழ்ச் சைவர்களின் மரபுரிமையான திருக்கேதீச்சர திருக்கோவில் நிர்வாகத்திற்கு ஒட்டுமொத்த தமிழ்ச்சைவர்களின் ஆதரவை வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

மத நல்லிணக்கத்தை பாதிக்கும் இச் செயலிற்கு உறுதுணை வழங்காது மன்னார் ஆயர் இல்லம் சொரூபத்தை திருக்கேதீச்சர நுழைவாயிலான அவ்விடத்திலிருந்து அகற்ற தேவாலாய நிர்வாகத்தை பணிக்க வேண்டும்.

அரச உயர் அதிகாரிகள் இனியும் அசமந்த போக்குடன் நடந்து கொள்ளாது மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும், தொல்லியல் மரபுரிமைகளில் மாற்றம் செய்யும், தனித்துவத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

அத்துடன் சர்ச்சைக்குரிய சொரூபத்தை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சைவத்தமிழர்கள் சார்பாக அகில இலங்கை சைவ மகா சபையினராகிய நாம் கேட்டு நிற்கின்றோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

 

 

Exit mobile version