செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

Untitled 82

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த இறைச்சியை உட்கொண்டதால் உயிரிழந்த தனது செல்லப் பிராணி ‘பப்பி’ (Puppy) க்காக மூன்று ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு, லீ வளர்த்து வந்த ‘வெஸ்ட் ஹைலேண்ட் டெரியர்’ வகை நாய், குடியிருப்பு வளாகப் பூங்காவில் வீசப்பட்டிருந்த விஷம் கலந்த கோழி இறைச்சியைச் சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்தது. அந்தப் பூங்காவில் வீசப்பட்டிருந்த இறைச்சியைச் சாப்பிட்ட மேலும் 9 நாய்களும் அன்றைய தினமே உயிரிழந்தன.

சுமார் 13 ஆண்டுகளாகத் தனது குழந்தையைப் போல வளர்த்த செல்லப் பிராணியின் மரணம் லீயைத் தீராத துயரத்தில் ஆழ்த்தியது. விசாரணையில், 65 வயதுடைய முதியவர் ஒருவர் ‘சோடியம் புளோரோஅசிடேட்’ (Sodium Fluoroacetate) என்ற கொடிய நச்சைக் கலந்து பூங்காவில் வீசியது கண்டறியப்பட்டது. இருப்பினும், சீனாவில் விலங்கு வதைக்கு எதிரான சட்டங்கள் பலவீனமாக இருந்ததால், அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது லீயிற்குப் பெரும் சவாலாக இருந்தது. இதனால், தனது வேலையைத் துறந்த லீ, கடந்த மூன்று ஆண்டுகளாகச் சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களைத் தாமாகவே கற்றுத் தேர்ந்தார்.

ஏனைய பாதிக்கப்பட்ட நாய் உரிமையாளர்களால் சட்டத்தரணிகளை அமர்த்த முடியாத சூழல் நிலவியதால், லீயே அவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையானார். “பப்பி அனுபவித்த வேதனையை என்னால் மறக்க முடியாது; அவனது மரணத்திற்கு நீதி தேடித்தருவதே எனது ஒரே நோக்கம்” என்று லீ உருக்கத்துடன் தெரிவித்தார். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நாய் உரிமையாளர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விஷம் வைத்த முதியவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

தனது செல்லப் பிராணிக்காக ஒரு பெண் தனி ஒரு ஆளாகச் சட்டத்தைக் கற்றுப் போராடி வெற்றி பெற்றுள்ளமை, விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் விலங்கு பாதுகாப்புச் சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்தச் சம்பவம் மீண்டும் வலுப்படுத்தியுள்ளது. லீயின் இந்தத் துணிச்சலான செயல், நீதிக்காகப் போராடுபவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகப் பார்க்கப்படுகிறது.

Exit mobile version