கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனத் தொழிலதிபர் கைது: 3.9 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்!

world 68

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் 3,915,000 ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற 35 வயதுடைய சீனத் தொழிலதிபர் ஒருவர் இன்று காலை (ஏப்ரல் 11, 2026) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கோலாலம்பூரிலிருந்து பேட்டிக் ஏர் (Batik Air) நிறுவனத்திற்குச் சொந்தமான OD-297 என்ற விமானம் மூலம் நள்ளிரவு 12.50 மணியளவில் அவர் இலங்கைக்கு வந்தடைந்திருந்தார்.

அறிவிக்கப்படாத இந்தச் சிகரெட் தொகையைத் தனது பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைத்து, விமான நிலையத்தின் பசுமை நடைபாதை (Green Channel) வழியாக வெளியே கொண்டு செல்ல முயன்ற போதே அங்கிருந்த சுங்க அதிகாரிகள் அவரை இடைமறித்துச் சோதனையிட்டனர். இதன்போது, சீனாவில் தயாரிக்கப்பட்ட பெருமளவிலான சிகரெட் கார்ட்டூன்கள் அவரது உடமைகளுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டன.

இலங்கைக்குள் சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாகக் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துச் சிகரெட்டுகளையும் அரசுடைமையாக்கச் சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன், குறித்த சீனத் தொழிலதிபருக்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கப்பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விமான நிலையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காகச் சுங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் தற்போது தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக விமான நிலையத்தில் இவ்வாறான பல கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version