சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருவதுடன், தேவாலயக் கட்டிடங்களை இடித்துத் தள்ளும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
செங்டூ (Chengdu) நகரில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ (Early Rain Covenant Church) தேவாலயத்தில் சீன பாதுகாப்புப் படையினர் விசேட சோதனையை நடத்தினர். இதில் தேவாலயத்தின் தற்போதைய தலைவர் லி யிங்சியாங் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘சீனாவின் எருசலேம்’ என்று அழைக்கப்படும் வென்சூ (Wenzhou) நகரில், பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் ‘யாயாங்’ தேவாலயக் கட்டிடம் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டுள்ளது.
மத நடைமுறைகளைச் சீன கம்யூனிஸ்ட் அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் (Sinicization of Religion) திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் தேவாலயங்களைத் தவிர, சுயமாக இயங்கும் திருச்சபைகளைச் சட்டவிரோதமானவை என அரசு முத்திரை குத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே சீனா முழுவதும் போதகர்கள் மற்றும் திருச்சபை உறுப்பினர்கள் திட்டமிட்டுத் தேடிக் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மதச் சுதந்திரத்திற்கு எதிரான இந்தத் தொடர் நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

