ஏப்ரல் 19 பிரார்த்தனை தினமாகப் பிரகடனம்: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவிப்பு!

world 142

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், நீதிக்காகவும் எதிர்வரும் 2026 ஏப்ரல் 19 ஆம் திகதியைப் பிரார்த்தனை தினமாக இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை பிரகடனப்படுத்தியுள்ளது. கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று (13) இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

அன்றைய தினம் இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்கத் தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகளும், கூட்டுப் பிரார்த்தனை வழிபாடுகளும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற அந்தத் துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், காயமடைந்தவர்களின் நல்வாழ்விற்காகவும் இந்த வழிபாடுகள் அமையும்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீண்டகாலமாக எதிர்பார்த்து வரும் உண்மைத்தன்மை மற்றும் இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் குறித்த விபரங்களை இறைவன் வெளிப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் பிரார்த்தனையின் முக்கிய நோக்கம் என கர்தினால் குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையிலும், ஆன்மீக ரீதியிலும் நீதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை அவர் இதன்போது வலியுறுத்தினார்.

தாக்குதல்கள் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தித் திருச்சபை இந்த விசேட நாளை ஒதுக்கியுள்ளது. இதில் அனைத்து இன மற்றும் மத மக்களையும் இணைந்து கொள்ளுமாறு திருச்சபை அழைப்பு விடுத்துள்ளது.

Exit mobile version